நெல்லை -சென்னை வந்தேபாரத் ரயில் உள்ளிட்ட 9 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை பிரதமர் திரு.நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்

பிரதமர் திரு. நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் 9 வந்தே பாரத் ரயில்களை இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த புதிய வந்தே பாரத் ரயில்கள் நாடு முழுவதும் இணைப்பை மேம்படுத்துவதற்கும் ரயில் பயணிகளுக்கு உலகத் தரம் வாய்ந்த வசதிகளை வழங்குவதற்கும் பிரதமரின் தொலைநோக்கு பார்வையை நனவாக்குவதற்கான ஒரு முன்னெடுப்பாகும். 

கொடியசைத்து துவக்கி வைக்கப்பட்ட புதிய ரயில்கள்:

உதய்பூர் – ஜெய்ப்பூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்

திருநெல்வேலி-மதுரை-சென்னை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்

ஹைதராபாத் – பெங்களூரு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்

விஜயவாடா – சென்னை (ரேணிகுண்டா வழியாக) வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்

பாட்னா – ஹவுரா வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்

காசர்கோடு – திருவனந்தபுரம் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்

ரூர்கேலா – புவனேஸ்வர் – பூரி  வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்

ராஞ்சி – ஹவுரா  வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்

ஜாம்நகர்-அகமதாபாத்  வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்

வந்தே பாரத் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்த பின்னர் பேசிய பிரதமர் திரு. நரேந்திரமோடி, ஒன்பது வந்தே பாரத் ரயில்களின் தொடக்கம் என்பது  நாட்டின் நவீன இணைப்பில் முன்னெப்போதும் இல்லாத வகையில் நடைபெற்ற நிகழ்வு என்று கூறினார்.  “நாட்டின் உள்கட்டமைப்பு வளர்ச்சியின் அளவு மற்றும் வேகம் 140 கோடி இந்தியர்களின் லட்சியத்துடன் சரியாக பொருந்துகிறது” என்று அவர் கூறினார்.

இன்று தொடங்கப்பட்ட ரயில்கள் மிகவும் நவீனமானவை மற்றும் வசதியானவை என்று பிரதமர் கூறினார். இந்த வந்தே பாரத் ரயில்கள் புதிய இந்தியாவின் புதிய உற்சாகத்தின் அடையாளங்கள் என்றும் அவர் பெருமிதம் தெரிவித்தார். 

வந்தே பாரத் ரயில்களில் ஒரு கோடியே 11 லட்சத்துக்கும் அதிகமான பயணிகள்  பயணம் செய்துள்ளதாகத் தெரிவித்த அவர், வந்தே பாரத் ரயில்கள் மீதான மோகம் அதிகரித்து வருவது குறித்தும் மகிழ்ச்சி தெரிவித்தார்.

பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 25 வந்தே பாரத் ரயில்கள்  மக்களுக்கு சேவையாற்றி வருவதாக பிரதமர் குறிப்பிட்டார். இன்று மேலும் 9 வந்தே பாரத் ரயில்கள் அந்த சேவையில் இணைகின்றன, “வந்தே பாரத் ரயில்கள் நாட்டின் ஒவ்வொரு பகுதியையும் இணைக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை” என்றும்  அவர் நம்பிக்கை தெரிவித்தார். 

நேரத்தை மிச்சப்படுத்தவும், ஒரே நாளில் பயணத்தை மேற்கொள்ளவும் விரும்பும்  மக்களுக்கு வந்தே பாரத் ரயில்கள் உபயோகமாக இருப்பது குறித்தும் அவர் குறிப்பிட்டார். வந்தே பாரத் ரயில்களால் இணைக்கப்பட்டுள்ள இடங்களில் சுற்றுலா அதிகரித்து, பொருளாதார நடவடிக்கைகள் அதிகரிக்க வழிவகுத்ததையும் அவர் சுட்டிக்காட்டினார்.

நாட்டின் நம்பிக்கை, நம்பிக்கை நிறைந்த சூழலில் நாட்டின் சாதனைகள் குறித்து ஒவ்வொரு குடிமகனும் பெருமிதம் கொள்வதாக பிரதமர் மோடி அடிக்கோடிட்டுக் காட்டினார். சந்திரயான் 3 மற்றும் ஆதித்யா எல் 1 ஆகியவற்றின் வரலாற்று வெற்றிகளை அவர் குறிப்பிட்டார். இதேபோல், ஜி 20 வெற்றி இந்தியாவின் ஜனநாயகம், மக்கள்தொகை மற்றும் பன்முகத்தன்மையின் வலிமையை வெளிப்படுத்தியுள்ளது என்றும் அவர் கூறினார்.

மகளிர் இட ஒதுக்கீடு சட்டம் பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை  முன்னெடுப்பதற்கான ஒரு தீர்க்கமான தருணம் என்றும் அவர் குறிப்பிட்டார்.   இது தொடர்பாக அவர் குறிப்பிடுகையில், பல ரயில் நிலையங்கள் பெண் அதிகாரிகளால் நிர்வகிக்கப்படுகின்றன.நம்பிக்கையுள்ள இந்தியா தனது நிகழ்கால மற்றும் எதிர்காலத் தேவைகளை ஒரே நேரத்தில் நிறைவேற்றி வருகிறது என்றும் பிரதமர் கூறினார்.

உள்கட்டமைப்பு மேம்பாட்டில் தடையற்ற ஒருங்கிணைப்புக்கான பிரதமரின் பன்முக  இணைப்புக்கான தேசிய மெகா திட்டம் (கதிசக்தி மாஸ்டர் பிளான்) மற்றும் போக்குவரத்து மற்றும் ஏற்றுமதி தொடர்பான கட்டணங்களைக் குறைப்பதற்கான புதிய தளவாடக் கொள்கை ஆகியவற்றை அவர் பட்டியலிட்டார்.

ஒரு போக்குவரத்து முறை மற்ற முறைகளுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்பதால்  பன்முக இணைப்பு  குறித்தும் அவர் பேசினார்.  இவை அனைத்தும் சாமானிய குடிமக்களின் பயணத்தை எளிதாக்குவதாகும் என்று அவர் கூறினார்.

சாமானிய மக்களின் வாழ்க்கையில் ரயில்வேயின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய  பிரதமர், முந்தைய காலங்களில் இந்த முக்கியமான துறை புறக்கணிக்கப்பட்டதாக வருத்தம் தெரிவித்தார்.

இந்திய ரயில்வேயில் தற்போதைய அரசாங்கத்தின் மாற்றத்திற்கான முயற்சிகள்  குறித்து விளக்கிய பிரதமர், ரயில்வேக்கான இந்த ஆண்டு பட்ஜெட் என்பது 2014 ஆம் ஆண்டின் ரயில்வே பட்ஜெட்டை விட 8 மடங்கு அதிகமாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது என  தெரிவித்தார். இதேபோல், இரட்டை ரயில்பாதைகள், மின்மயமாக்கல் மற்றும் புதிய வழித்தடங்களுக்கான பணிகள் நடந்து வருகின்றன என்றார்.

“வளர்ச்சிப் பாதையில் செல்லும் இந்தியா இப்போது அதன் ரயில் நிலையங்களையும் நவீனப்படுத்த வேண்டும்” என்று பிரதமர் வலியுறுத்தினார்.  இந்த சிந்தனையை மனதில் கொண்டு, இந்தியாவில் முதல் முறையாக ரயில் நிலையங்களின் மேம்பாடு மற்றும்  நவீனமயமாக்கலுக்கான இயக்கம்  தொடங்கப்பட்டுள்ளது.

இன்று, ரயில் பயணிகளின் வசதிக்காக நாட்டில் அதிக எண்ணிக்கையிலான நடைமேம்பாலங்கள், மின் தூக்கிகள், மின் படிக்கட்டுகள் கட்டப்பட்டு வருகின்றன. சில  நாட்களுக்கு முன்பு, நாட்டின் 500 க்கும் மேற்பட்ட முக்கிய நிலையங்களை மறுசீரமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன.

சுதந்திர தின அமுத பெருவிழாவின் போது கட்டப்பட்ட இந்த புதிய நிலையங்கள்  சுதந்திர தின அமுத பெருவிழா பாரத் நிலையங்கள் என்று அழைக்கப்படும் என பிரதமர் கூறினார். “இந்த நிலையங்கள் வரும் நாட்களில் புதிய பாரதத்தின் அடையாளமாக மாறும்”, என்று அவர் நம்பிக்கை கூறினார்.

ரயில் நிலையம் நிறுவப்பட்ட ‘நிர்மாணிகப்பட்ட’ தினத்தை ரயில்வே கொண்டாடத்  தொடங்கியிருப்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த பிரதமர், கோயம்புத்தூர், சத்ரபதி சிவாஜி டெர்மினஸ் மற்றும் மும்பை ஆகியவற்றின் கொண்டாட்டங்களைக் குறிப்பிட்டார்.

கோவை ரயில் நிலையம், 150 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. “இப்போது ரயில் நிலையங்கள் தொடங்கப்பட்ட நாளைக் கொண்டாடும் இந்த  பாரம்பரியம் மேலும் விரிவுபடுத்தப்படும், மேலும் அதிகமான மக்கள் இதில் ஈடுபடுவார்கள்”, என்று அவர் கூறினார்.

ஒரே பாரதம் சிறப்பான பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வையை உறுதியின் மூலம் சாதிப்பதற்கான வழிமுறையாக நாடு மாற்றியுள்ளது என்று பிரதமர் கூறினார். “2047 க்குள் வளர்ந்த இந்தியா என்ற இலக்கை அடைய, ஒவ்வொரு மாநிலத்தின் மற்றும் ஒவ்வொரு மாநில மக்களின் வளர்ச்சி அவசியம்” என்று பிரதமர் மோடி  வலியுறுத்தினார்.

ரயில்வே அமைச்சரின் மாநிலத்தில் ரயில்வே வளர்ச்சியை மையப்படுத்த வேண்டும்  என்ற சுயநல சிந்தனை நாட்டிற்கு நிறைய பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது என்றும், இப்போது எந்த மாநிலத்தையும் பின்னோக்கி வைத்திருக்க முடியாது என்றும் அவர் கூறினார். “ஒவ்வொருவரும் ஒவ்வொருவரின் வளர்ச்சிக்கு உதவ வேண்டும் என்ற தொலைநோக்கு பார்வையுடன் நாம் முன்னேற வேண்டும்”, என்று அவர் கூறினார்.

கடினமாக உழைக்கும் ரயில்வே ஊழியர்களிடையே உரையாற்றிய பிரதமர், ஒவ்வொரு பயணத்தையும் பயணிகளுக்கு மறக்க முடியாததாக மாற்றுமாறு கேட்டுக்கொண்டார். “ரயில்வேயின் ஒவ்வொரு ஊழியரும் பயணத்தை எளிதாக்குவதற்கும், பயணிகளுக்கு  ஒரு நல்ல அனுபவத்தை வழங்குவதற்கும் தொடர்ந்து உணர்திறன் கொண்டிருக்க வேண்டும்” என்று பிரதமர் கேட்டுக்கொண்டார்.

ரயில் நிலையங்கள் மற்றும்  ரயில்கள் தூய்மையாக இருப்பதன் புதிய தரநிலைகளை  ஒவ்வொரு பயணியும் உற்றுநோக்குவதாக பிரதமர் கூறினார். மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அக்டோபர் 1 ஆம் தேதி காலை 10 மணிக்கு திட்டமிடப்பட்ட தூய்மை இயக்கத்தில் அனைவரும் ஈடுபட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

சர்தார் படேலின் பிறந்த நாளான அக்டோபர் 2 முதல் அக்டோபர் 31 வரையிலான  காலகட்டத்தில் கதர் மற்றும் சுதேசி பொருட்களை வாங்குவதில் அனைவரும் தங்களை அர்ப்பணித்துக் கொள்ளுமாறும், உள்ளூர் மக்களுக்காக அதிக குரல் கொடுக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

“இந்திய ரயில்வே மற்றும் சமூகத்தில் ஒவ்வொரு மட்டத்திலும் நிகழும் மாற்றங்கள்  வளர்ந்த இந்தியாவை நோக்கிய ஒரு முக்கியமான படியாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்” என்று பிரதமர் தனது உரையை முடித்தார்.

இந்த நிகழ்ச்சியில் மாநிலங்களின் ஆளுநர்கள், முதல்வர்கள், அமைச்சர்கள்,  நாடாளுமன்ற உறுப்பினர்கள், மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

SM/ANU/BS/KRS
(வெளியீட்டு அடையாள எண்: 1960138)  

இந்த வெளியீட்டை படிக்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *