மேற்காசியாவில் நிலவும் சூழலுக்கு இடையே மத்திய அரசு மேற்கொண்டு வரும் தொடர் நடவடிக்கைகள் குறித்து புதுதில்லி தேசிய ஊடக மையத்தில் இன்று (17.04.2026) ஊடகவியலாளர்களிடம் விளக்கப்பட்டது. பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு, துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழி அமைச்சகம், வெளியுறவு அமைச்சகம் ஆகியவற்றைச் சேர்ந்த அதிகாரிகள் எரிபொருள் இருப்பு, கடல்சார் நடவடிக்கை, மேற்காசியாவில் இந்தியர்களுக்கு அளிக்கப்படும் உதவி, பல்வேறு துறைகளில் நிலைத்தன்மையை பராமரிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து விளக்கினர்.
50.5 லட்சம் வீடுகளுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர்கள் நேற்று விநியோகிக்கப்பட்ட நிலையில் சிலிண்டர்கள் விநியோகம் இயல்பாக உள்ளது என்று மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். சமையல் எரிவாயு சிலிண்டர்கள் பதுக்கல் மற்றும் கள்ளச்சந்தையைத் தடுக்க பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மேற்கொண்ட சோதனைகளின் போது நேற்று வரை 255 சமையல் எரிவாயு விநியோகஸ்தர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதோடு, 65 விநியோகஸ்தர்களின் உரிமங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன என்றும் அவர்கள் கூறினர்.
இணையம் வழியாக சமையல் எரிவாயு முன்பதிவு செய்வது 98 சதவீதம் அதிகரித்துள்ளது. 5 கிலோ கிராம் எடை கொண்ட சிலிண்டர்கள் பற்றி 2026 ஏப்ரல் 3-க்குப் பின் 6,100 விழிப்புணர்வு பிரச்சாரசங்கள் மேற்கொள்ளப்பட்டு 80,000 எண்ணிக்கையில் 5 கிலோ கிராம் சிலிண்டர்கள் விற்கப்பட்டுள்ளன. நேற்று மட்டும் 400 முகாம்களில் 8,643 சிலிண்டர்கள் விற்கப்பட்டன.
16.04.2026 அன்று 8,211 மெட்ரிக் டன் அளவுக்கு வணிக சமையல் எரிவாயு விற்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் மாதத்தில் இதுவரை ஆட்டோக்களுக்கான எரிவாயு சுமார் 296 மெட்ரிக் டன் விற்பனையாகியுள்ளது.
மார்ச் 2026-க்குப் பின் 4.68 லட்சம் குழாய் மூலமான சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், 5.23 லட்சம் வாடிக்கையாளர்கள் புதிய இணைப்புகளுக்குப் பதிவு செய்துள்ளனர்.
வளைகுடா பிராந்தியத்திலிருந்து கடந்த 24 மணி நேரத்தில் 2447 இந்திய மாலுமிகள் பாதுகாப்புடன் நாடு திரும்பியுள்ளனர். மேலும், விமானங்கள் மூலம் பிப்ரவரி 28-க்குப் பின் சுமார் 10,38,000 பயணிகள் மேற்காசியாவிலிருந்து இந்தியாவுக்கு பயணம் செய்துள்ளனர்.
1,041 இந்திய மாணவர்கள் மற்றும் 657 இந்திய மீனவர்கள் உட்பட மொத்தம் 2,358 இந்தியர்கள் ஈரானிலிருந்து அர்மீனியா, அஜர்பைஜான் வழியாக இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ள டெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம் ஏற்பாடு செய்துள்ளது.
நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஹஜ் புனிதப்பயணம் மேற்கொள்ளும் முதலாவது தொகுப்பினர் 2026 ஏப்ரல் 18 அன்று சவுதி அரேபியாவிற்குச் செல்லவிருக்கின்றனர் என்ற விவரங்களையும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2253071®=3&lang=1
****
TV/SMB/KPG/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2253130)
